Visitors

4 January 2010

எழில் மாலை வேளை!

எத்தனை எத்தனை எழில்மாலை-- எங்கும்
...இன்பம் பொங்கவென்று வந்தவேளை--தத்தி
தத்திமலை வாயில்விழத் தங்கக் கதிரோனும் செல்லும்
...காட்சி என்ன மாட்சி!

மேலைத்திசை எங்கும் ரத்தச் சிகப்பு-- என்னை
...மேலும் மேலும் வந்துகவ்வும் திகைப்பு-- தென்னஞ்
சோலையும் பாளையும் மேயும் காளையும் பசுவும்-- அந்த
...வண்ணம் கொண்டு மின்னும்!

எத்தனை முறைகள் பார்த்திட் டாலும்-- இது
...என்றும் புதிதாகி யென்னை ஆளும்-- என்றன்
சித்தத்திற் குள்ளும் இக்காட்சி சென்றுபல வண்ணங்களைப்
...பூசும் காணக் கூசும்!

ஒவ்வொரு கணமும் வண்ணம் மாறும்--உடன்
...ஒவ்வொரு வித அழகு நேரும் --இந்த
செவ்வை மிகும் வானெழிலை சித்திரம் வரைய கையும்
...துடிக்கும் தோல்வி கிடைக்கும்!

No comments:

Post a Comment