Visitors

4 June 2010

கூறின் ஆறே சமுசாரம்
...கூடும் அக்கரை யதுபிரம்மம்
வேறென் றிக்கரை இருந்தந்த
...வெம்மா யைநதிக் கடந்திடுமத்
தீரன் அவனே ஜீவாத்மா;
...தோன்றும் வழிகள் நாலாகும்
நீரின்மேல் நடப்பது யோகம்
...நீந்திக் கடப்பது கருமமதாம்
யாரின் உதவியும் வேண்டாம்
...எகிறித் தாண்டல் ஞானமெனில்
பாரின் மக்கள் பலர்செல்லும்
...பாலம் ஆகும் பக்தியதே!

(7- 5- 67.)


கருத்து.
-----------
ஆறு=சம்சாரம்
அக்கரை=பரப்பிரம்மம்
கடப்பவன்=ஜீவாத்துமா

நீரில் நடந்து கடப்பது=யோகநெறி
நீந்திக் கடப்பது=கரும நெறி
தாண்டிக் கடப்பது=ஞானநெறி
பாலத்தின் மூலம் கடப்பது=பக்தி நெறி.

3 June 2010

கதாதர அகவல்!

பொய்யாம் ஜகமாயைப் போயொழிய உன்னருளை
செய்யாயோ செய்குவையோ செப்பாய் கதாதரனே!

சாருயிர்க்கு பொருளுக்கு சரீரத்திற் கேங்காமல்
ஆருயிர்க்கும் நானேங்க அருளாய் கதாதரனே!

வீர விவேகா நந்தன் விரும்பும் பொற்பாதத்தை
சேர அணைத்திடு மந்த சுகம்தா கதாதரனே!

விட்டென்றன் உயிர்ப்பிரிந்து வீணாகப் போகுமுன்னுன்
பட்டான மேனியென் கண்படுமோ கதாதரனே!

ஒன்றொன் றொன்றொன்றொன்றென உள்ளபுல .னைந்தாலே
கொன்றென்னை வாட்டுவதுன் குறிப்போ கதாதரனே!

தேனுன்னும் வண்டாக தேவாஉன் பாதமலர்த்
தானெண்ணிச் சிந்தை களித்திடுமோ கதாதரனே!

முட்டாள் என்பிழைஎண்ணி முனிந்தேநீ என்கையை
விட்டால்நான் என்னசெய்வேன் வேண்டாம் கதாதரனே!

அத்துவித ஞானரசம் அன்னைஅருள் பானரசம்
நித்தம் அருந்திய உனக்கு நேர்யார் கதாதரனே!

தஞ்சம் அடைந்தவரை தடுத்தா ளுவாயென்று
நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன் நேசா கதாதரனே!

(கதாதர அகவல் நிறைவுற்றது!)