9 years ago
31 December 2009
அமுதப் பாடல்கள்!
உள்ளம் குழைய ஊனுருக
...உன்னா மத்தை மிகச்சொல்லி
வெள்ளம் என உன் னிடமன்பு
...வெறிபோற் கொள்ளா துலகத்தில்
கள்ளம் கொண்ட மனவாக்கு
...காயம் இவற்றால் கடுநரகப்
பள்ளம் விழுவேன் தனைக்காப்பாய்
...பரம ஹம்ஸ ராமக்ருஷ்ணா!....1.
அழுதேன் பலகால் உன்முன்னே
...அரசே நீயும் அறியாயா?
தொழுதேன் உன்னைத் தொண்டன்யான்
...துரையே நீயும் தெரியாயா?
மொழிந்தேன் குறையை தீந்தமிழில்
...மணியே உனக்குப் புரியாதா?
விழலேன் வேறு என்செய்வேன்
...விள்ளாய் முத்து ராமக்ருஷ்ணா!....2.
30 December 2009
பகவானைப் பணி மனமே!
நம்பினேன் அருள்செய் நாயகனே !
ராகம்-திலங் தாளம்- ஆதி
பல்லவி
=======
நம்பினேன் அருள்செய் நாயகனே!உன்பால்
நாளும் பக்திஓங்க நீளும் பிறவி நீங்க(நம்பி)
அனுபல்லவி
==========
அம்பிகை ஸ்ரிபவ தாரிணி பாலா!
அன்னை சாரதையின் ஆருயிர் மணவாளா!(நம்பி)
சரணம்
======
வஞ்சப் புலனைந்தைக் கொஞ்சமும் நம்பிடேன்!
..வந்த உலகை எந்தன் சொந்தமாய் நம்பிடேன்!
தஞ்சமென் ருன்மலர்த் தாளையே நம்பினேன்!
..தாமதம் செய்யாதே! ராமக்ருஷ்ண தேவாஉனை(நம்பி)
பகவான் ராமகிருஷ்ணருக்கு, மலர்களால் அருச்சனை!
வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!
தீப தூபம் காட்டல்.
-----------------------
ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!
Subscribe to:
Posts (Atom)