Visitors

31 January 2010

(நஸ்ருல் இஸ்லாமின்மொழிபெயர்ப்பு.)

சொல்லுசொல்லு பயமறியா சுத்த வீரனே!
நில்லு,உயரத் தலையைத் தூக்கி நில்லு தீரனே!

மன்னுமிய மலையும்நிமிர்ந் தென்னைப் பார்த்தது!
மமதை நீங்கி முடியை தாழ்த்தி மண்ணைப் பார்த்தது!-என்று(சொல்லு)

விண்ணின் விரிவில் ஏறிஏறி வீரித் துளைத்தேன்
வெண்மதி கதிர் மின்மினிகளை விட்டும் உயர்ந்தேன்!-என்று(சொல்லு)

அம்புவியின் அமரருலகின் அளவை மீறினேன்!
ஆண்டவனா ருலகினையும் தாண்டி ஏறினேன்!-என்று(சொல்லு)

எம்பிரானும் வியர்ந்தயர்ந்தார்; என்நுதல் மேலே
ஈச்வரனே வெற்றிகுறி யென்ன ஜொலித்தார்!- என்று(சொல்லு)

29 January 2010

நஞ்சே நிறைகனி யதனைப்போய்
...நற்கனி யெனநினை அஞ்சுகத்தை
பஞ்சே தரும்காய் பழுக்குமென
...பசித்தே காக்கும் பறவையைப்போல்
அஞ்சே புலன் தரு ஆனந்தம்
...அருந்திக் காக்கும் அசடன்யான்
நெஞ்சே கனிய நீதரும் இன்
...அருள்கனி பெறவோ ராமக்ருஷ்ணா!....49.

கற்றே கலைகள் அறிந்தென்ன?
...காசை மலைபோல் குவித்தென்ன?
நற்றேன் மொழியார் அணைப்பிருந்தும்
...நலம்பல நிறைந்தும் பயனென்ன?
சற்றே வாழ்ந்து சருகாகிச்
...சாயும் உடலின் தன்மையினை
உற்றே நோக்கி உளம்நடுங்கி
...உனைச்சர ணடைந்தேன் ராமக்ருஷ்ணா!....50.

28 January 2010

பாழின் இருளோ படுகுழியோ?
...பஞ்சம் சூழ்ந்த பட்டிணமோ?
ஊழின் காலத் துண்டாகும்
...உலகின் நிலையோ புவிவாழ்வு?
யாழின் இசையும் இழிவாக
...இசைக்கும் நாமக தாதரனே!
தாழின் அருளால் தடுத்தாளும்
...தினமெத் தினமோ? ராமக்ருஷ்ணா!....47.

கொங்கை மாதர் கண்ணழகும்
...கொண்டை யழகும் குறுநகையின்
அங்கை யழகும் தொடையழகும்
...அழிக்கும் அழகாம் அழியழகாம்
கங்கைக் கரைபே லூரில் உறை
...கண்ணே உன்றன் கட்டழகும்
செங்கை அபயம் செய்யழகும்
...செழிக்கும் அழகாம் ராமக்ருஷ்ணா!....48.

27 January 2010

வேதா கமங்கள் சாத்திரங்கள்
...விள்ளுபு ராணங் கள் ஏதும்
ஓதா தவனோ ராதவன்யான்
...ஒன்றும் அறியா தவனானால்
காதால் நாவால் உன்னாமம்
...கேட்கச் சொல்ல இன்புறுவேன்!
போதா வோஇது புகல்வாயே
...போற்றிடு வோர்க்கருள் ராமக்ருஷ்ணா!....45.

திக்கும் தெரியா வனமேயோ?
...திசையொன் றறியா விரிகடலோ?
மக்கும் குப்பைக் கூளமதோ?
...மரணக் கிணறோ? மணற்காடோ?
ஒக்கும் வாழ்வில் வருந்தாமல்
...ஒண்தா மரையாம் உன்பாதம்
நக்கும் வண்டாய் நான்சுகிக்கும்
...நாளென் நாளோ? ராமக்ருஷ்ணா!....46.

26 January 2010

கும்பத் தனமே கோயிற்கருக்
...குழியே தெய்வம் எனஏங்கி
வெம்பத் தகுமோ விழலேனும்
...விரைகங் கைக்கரை சோலைசூழ்
உம்பர்ப் புகழும் பேலூரின்
...உயர்கோ புரமும் உள்ளுறையும்
அன்பர்க் கருளுன் னையும்கண்டே
...அகமகிழ் வேனோ ராமக்ருஷ்ணா!....43.

தைக்கும் விழியார் உறவிற்கும்
...தனத்தின் குவையைச் சேர்த்தற்கும்
கைக்கும் வாய்க்கும் உணவிற்கும்
...கவலைக் கொண்டு கடைசியிலே
பொய்க்கும் வாழ்க்கை இதுவென்று
...புலம்பும் படிக்குச் செய்யாமல்
மொய்க்கும் வண்டாய் உன்பாத
...மலருக்(கு) ஆக்கு ராமக்ருஷ்ணா!....44.

25 January 2010

சமயம் யாவும் ஒருவனையே
...சாறும் வகையைக் காட்டிடவே
அமையும் பலவாம் பாதைஎனும்
...அவ்வுண் மையிவ் வுலகுணர
குமையும் துன்பம் பலபட்டு
...கூறும் நெறிகள் பலகண்டாய்
தமையும் தன்பொருள் ஆவியையும்
...தரணிக் களித்த ராமக்ருஷ்ணா!....41.

நீரும் நிலமும் தீகாற்றும்
...நீளா காசம் இவைபிணைந்தே
நேரும் தேக பந்தத்தால்
...நானுன் உறவைப் பிரிந்துற்ற
பேரும் வடிவும் கொள்பேத
...பிரபஞ் சத்தை விட்டுன்னை
சேரும் படிசெய் வாயேசத்
...சித்தா நந்தா ராமக்ருஷ்ணா!....42.

24 January 2010

கல்மனம் உருகிடுமா?

ராகம்- காபி.
-----------

பல்லவி.
--------
கல்மனம் உருகிடுமா?-- எந்தன்
கதாதரா உந்தன் பதாரவிந்த மெண்ணி(கல்)

அனுபல்லவி.
-----------
சொல்மனம் செயலெல்லாம் சேர்ந்திடுமா?-- பரா
சக்தி மகனே உன்மேல் பக்தியேற்படுமா?(கல்)

சரணம்
-------
சாம முதல் வேதம் கற்றறியேனே!
சத்துவ குண நலம் அற்ற வெறியேனே!
தேமதுர சுவைசேர் ராமகிருஷ்ணா உன்பேர்
தினம்தினம் சொல்லிசொல்லி அனல்மெழு கெனவே என்(கல்)
-----------

23 January 2010

வாக்கால் மனத்தால் காயத்தால்
...வசையொன் றில்லா படிவாழ்ந்து
நாக்கால் எப்போ தும்உன்றன்
...நாமம் சொல்லும் இன்பத்தின்
தாக்கால் மயக்கம் கொள்ளவருள்
...தீரந ரேந்திர நாதனையும்
ராக்கால் தனையும் எமக்களித்த
...ராஸ மணிமகிழ் ராமக்ருஷ்ணா!....39

ஏடை எடுக்கா தறிவுற்றாய்
...எளிமை தன்னில் இன்புற்றாய்!
கூடை கூடை யெனஅருளால்
...கூறிச் சென்ற உன்னுரையாம்
வாடை மலரைத் தள்ளிகரு
...வாடாம் புன்மொழி நுகருமெனைக்
காடைச் சேர்முன் காப்பாயே!
...கருணைத் தேவே ராமக்ருஷ்ணா!....40.

22 January 2010

கஞ்ச மலரே நீயென்றால்
...கரிய வண்டே நானாகும்;
கொஞ்சும் அன்னை நீயென்றால்
...குலவும் குழந்தை நானாகும்;
விஞ்சும் மேகம் நீயென்றால்
...விளையும் பயிரே நானாகும்;
தஞ்சம் அளிப்போன் நீயென்றால்
...தாஸன் நானே ராமக்ருஷ்ணா!....37.

முலையுட் படுபால் தருதாயின்
...மேலாம் அன்பாம் நீவிரித்த
வலையுட் படுதல்; கொடுநாக
...வெங்கடி யுண்டார் பிழையாராம்;
சுளையுட் கொளுமோர் தீங்கனியின்
...சுவையே! பவதா ரிணித்தாயை
சிலையுட் பட்டெழச் செய்தவனே!
...சுகத்தின் உருவே!ராமக்ருஷ்ணா!....38.

21 January 2010

உண்டே நாவை வயிறதனை
...ஓம்பிடு வார்கள் என்னகண்டார்?
பெண்டே பொருளே என உழன்று
...பெறுமின் பத்தை பெருங்காயம்
கொண்டே கடலில் கலக்கினதாய்
...குறையச் செய்யும் பேரின்பம்
உண்டே உன்றன் அருளமுதை
...உண்டார்க் கெல்லாம் ராமக்ருஷ்ணா!....35.

சஞ்சித மோடா காமியத்தை
...சற்றுமி லாமல் களைந்திடலாம்
எஞ்சிடும் பிராரர்த் தம் அதனை
...எவரும் வெல்லல் ஆகாதென்(று)
அஞ்சிடு கின்றேன் அந்தோநான்
...அய்யா உன்றன் அடிகீழே
கெஞ்சிடு கின்றேன் கொடுமையதைக்
...குலைத்திடு வாயே ராமக்ருஷ்ணா!....36.

20 January 2010

பாலை வனத்தில் நீர்காணல்
...பசித்தோன் சுவைக்கும் பழம்காணல்
சாலை வெயிலிற் களைத்திட்டோன்
...சுகந்தரும் மரத்தின் நிழற்காணல்
வேலை யிடையே அலைபட்டோன்
...ஓடம் காணல் இச்சுகங்கள்
காலைப் பிடித்துனை வேண்டிடுவோர்
...காண்பா ரையா ராமக்ருஷ்ணா!....33.

உன்னடி யாரோ டிணங்கிடவும்
...உறங்கி யவரோ டெழுந்திடவும்
பன்னரும் உன்புகழ் பேசிடவும்
...பாடியும் ஆடியும் பரவிடவும்
தன்னைம றந்தே கண்ணீராய்
...தழுதழுத் திடநா குழறவுமென்
முன்னைய வர்புனி தம்பெறவே
...மகிழ்வே னோநான் ராமக்ருஷ்ணா!....34.

முன்னையவர்= ancestors

19 January 2010

கண்டீ ராநீர் கடவுளையே
...கண்ணால்? எனவே கேட்டநரேன்
பண்டோர் நாளில் அறியுவணம்
..."பார்த்தேன் பார்க்கின் றேன்பார்ப்பேன்
உண்டாம் இறைவன் அவனோடு
...உறவும் கொள்ளல் ஆகுமென
விண்டாய் உறுதி; இன்றெனக்கும்
...உரையாய் அதுபோல் ராமக்ருஷ்ணா!....31.

பொய்யேன் பக்தி நடிப்பென்று
...புவியில் உள்ளோர் அறியாமல்
மெய்யாய் உன்னைப் போற்றுகிறேன்
...மேலும் நீதான் எனக்கு அருள்
செய்யா திருப்ப தென்னவென
...சேர்ந்தே உன்னை ஏசுகிறார்
அய்யா அவர்கள் நாணிடவே
...அருள்செய் கண்டாய் ராமக்ருஷ்ணா!....32.

18 January 2010

கருணை செய் கதாதரா!

ராகம்:பாகேஸ்ரீ.

பல்லவி
-------
கஞ்சமலர்பதம் காட்டிடவே இன்னம்
கருணை செய்யாயோடா கதாதரா!

அனுபல்லவி
----------
பஞ்சுநிகர்ப் பதம் பாவிஎன் கல்நெஞ்சினில்
பதித்திடவே வா பரமஹம்ஸாவா(கஞ்ச)

சரணம்
--------
அன்னை சாரதா அணைத்த பதம் அல்லவோ
..அழகன் நரேந்திரன் அணிந்த பதம் அல்லவோ
சென்னை மடத்தில் சசி சேவித்தப் பதமல்லவோ
..சிறுவனெனக்கருள தினம்தினம் சொல்லவோ(கஞ்ச)
------ ------- * -------- --------
காசைக் காமம் தருசுகத்தை
...கருத்தில் சிறிதும் கொள்ளாமல்
தூசைப் போன்று தங்கமதைத்
...தொடவும் வெறுக்கும் இழிகுலத்து
வேசை யரையும் தேவியென
...வீழ்ந்தே பணியும் உனைப்போல
மாசை ஒழித்தார் மண்மேலும்
...விண்மே லுமிலை ராமக்ருஷ்ணா!....29.

பெண்ணின் பெருமை தனையுலகம்
...போற்றி யேத்தும் படியாக
அன்னைத் தூய சாரதையை
...ஆரா தித்துப் பணிந்தாயே!
எண்ணர்க் கரிய இச்செய்கை
...எவரே செய்ய வல்லார்கள்?
விண்ணின் நாட்டில் உள்ளவர்க்கும்
...வியப்பி துவாமே ராமக்ருஷ்ணா!....30.

17 January 2010

பஞ்ச வடியின் அடியிருந்து
...பகரொண் ணாத தவம்புரிந்தாய்!
எஞ்சும் படிக்கு ஏதுமிலா
...இறையின் காட்சி பலகண்டாய்!
மிஞ்சும் கொடுமை யதனாலே
...மேன்மைத் தாழும் உலகினுக்குத்
தஞ்சம் அளிக்க வெனத்தாளா
...தாயின் தயையால் ராமக்ருஷ்ணா!....27.

தாயின் அன்பைக் கடுகவின்
...தன்மை யாக்கும் உன்னன்பு
பேயின் தன்மைக் கொண்டவர்க்கும்
...பெருநெறி யளிக்கும் உன்னன்பு
சீயின் பாற்படு புழுவினையும்
...சேர அனைக்கும் உன்னன்பு
நாயின் பான்மைக் கொளெனையும்
...நயக்கும் அன்பா ராமக்ருஷ்ணா!....28.

16 January 2010

என்னை வளர்த்தல் தாயின்கடன்
...இசைவாய் காத்தல் தந்தைக்கடன்
பின்னைக் கல்வி போதித்தல்
...பேரா சிரியன் கடனாகும்!
முன்னை இவர்கள் செய்தகடன்
...முற்றும் பெற்றும் என்னபயன்?
உன்னைச் சாரும் கடனென்று
...நீஆ ளாக்கால் ராமக்ருஷ்ணா!....25.

மாயம் ஆகும் உலகென்றும்
...மனைவி மக்கள் பொய்யென்றும்
ஓயும் காலம் வரும்போது
...ஒருவரும் உதவார் எனத்தெரிந்தும்
தீயின் தழலைத் தலைக்கொண்டோன்
...துடித்தல் போலே உனைக்காண
நாயேன் துயரம் கொண்டறியேன்
...நாதா! அருள்ஸ்ரீ ராமக்ருஷ்ணா!....26.

15 January 2010

காளித் தாயின் பதம்பிடித்தாய்
...கண்ணன் மீதில் காதல்கொண்டாய்
தோளின் வலியுடை அனுமனெனத்
...தசரத ராமனைப் பூசித்தாய்!
நாள்,இடம் எனுமிவை நழுவியுயர்
...நான்மறை யுரைக்கும் நிலையுணர்ந்தாய்
தாளினில், கரத்தில் ஆப்புண்டோன்
தனை,நபி யையும்பணி ராமக்ருஷ்ணா!....23.

தங்கைத் தம்பித் தாய்தந்தை
...தமரும் மற்றை யுற்றவரும்
சங்கை யின்றி சந்தைநேர்
...சனத்தின் கூட்டம் கணக்கூட்டம்
மங்கைத் தூய சாரதையின்
...மணவா! உந்தன் அடியார்கள்
தங்கைக் கொட்டிப் புகழ்க்கூட்டம்
...திருக்கூட் டம்ஸ்ரீ ராமக்ருஷ்ணா!....24.

13 January 2010

அருள்கனித் தருவே!

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில், சிவாம்ருதம் எழுதிய கீர்த்தனை விவேகானந்தர் பாதங்களில் சமர்ப்பிக்கப் படுகிறது!

பல்லவி.
---------
நாதா உன்புகழ் நவில்வோமே--எந்த
நாளும் விவேகா நந்த நரேந்திர(நாதா)

அனுபல்லவி.
-----------
மாதாசாரதா குரு மஹராஜர்புதல்வா
மருள்நீக்கும் உருவே! அருள்கனித் தருவே!(நாதா)

சரணம்-- 1.
------------
பாலப் பருவம் முதல் பரகதிக்(கு)உருகினாய்
...பரமஹம்ஸ மலர்ப் பாதத்தேன் பருகினாய்!
கோலகமலக் கண்கள் காட்டிஅவரைக் கொண்டாய்!
...குருசோதரர்களைக் கூட்டி சங்கம் கொண்டாய்!(நாதா)

சரணம்-2.
-----------
தனியே பாரதத் தரைமிசை நடந்தாய்!
...தயையால் உருகியுன் இதயமும் உடைந்தாய்!
முனியே கடல்தாண்டி மேற்றிசையும் அடைந்தாய்!
...மூளும் உன்கருணையில் யாரையும் கடந்தாய்!(நாதா)

சரணம்--3.
--------------
நடைமுறை வேதாந்தம் நாடெங்கும் உரைத்தாய்!
...நற்றேன்மொழி பகர்ந்தே நன்மை எங்கும்நிறைத்தாய்!
தடை பலவும் தவிர்த்தே தருமப் பயிர் வளர்த்தாய்!
...தவ யோகியர்க் கரசாய் தரணியை வலம் வந்தாய்!(நாதா)

சரணம்-4.
-----------
செயல் ஞானம் பக்தி பயில்யோகம்யாவும்
...சேர்ந்த திருவடிவே சுந்தரனே இங்கு
துயிலும் பாரதத்தைத் துடித்தெழச் செய்தவனே!
...துரியம் துறந்து எங்கள் துயர்த் துடைக்க வந்த(நாதா)

12 January 2010

அபிடேகம்:
------------------
தேன்கொண் டிளநீற் றினைகொண்டு
...தூய வெண்மை நிறங்கொண்ட
பான்கொண் டுள்ளம் குளிரச்செய்
...பன்னீர் பானகநீர் நந்நீர்
நான்கொண் டுந்தன் மேனியெலாம்
...நனையும் படிஅபிஷே கித்தேன்
வான்கொண் லலென அருள்பொழிவோய்!
...வந்தித் தேனுனை ராமக்ருஷ்ணா!....21.

நைவேத்தியம்:
---------------
பாலும் சருக்கரை நெய்யினையும்
...பதமாய்க் கலந்து பக்குவித்து
சாலும் இனிப்பின் வகையுணவும்
...சாதங் கல்பற் பலவகைகள்
மேலும் கனிகள் பானங்கள்
...மிகவே உந்தன் இசைவறிந்து
மூளும் அன்போ டளிக்கின்றேன்
...உண்டே அருளாய் ராமக்ருஷ்ணா!...22.
மலர்களால் அருச்சனை!
-------------------

வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!

தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!

11 January 2010

சந்திர னின்குளி ரொளியும்நீ!
...சூரிய னின்வெங் கதிரும்நீ!
இந்திர போகத் தின்பம்நீ!
...ஏழையின் ஏக்கத் துன்பமும்நீ!
மந்திர வேதப் பொருளும்நீ!
...மழலை மொழியின் பொருளும்நீ!
தந்திரம் யாவும் செய்பவன்நீ!
...தனியேன் துணைநீ ராமக்ருஷ்ணா!....17.

நீராட்டல்!
===========
கங்கை நீரில் காவிரித்தாய்
...தரும்தண் ணீரில் நருமதையின்
பொங்கும் பிரம புத்திரையின்
...புனலில் வேறு புவியிலுள
தங்கும் புனிதம் உறுநதிகள்
...தரும்சலத் தாலே தலைவாஉன்
அங்கம் குளிர சொரிந்தேநீர்
...ஆட்டிம கிழ்வேன் ராமக்ருஷ்ணா!....18.

10 January 2010

கற்கும் கலைகளின் கருத்தாநீ!
...கருவின் உயிர்க்குக் காரணம்நீ!
சொற்கள் பலவின் பொருளும்நீ!
...சொல்லொண் ணாத பொருளும்நீ!
தெற்கும் வடக்கும் திசையெங்கும்
...திகழும் தேசோ மயமும்நீ!
பற்றொன் றில்லா பரமன்நீ!
...பாரின் முதல்நீ ராமக்ருஷ்ணா!....15.

மலரில் தேங்கும் மதுவும்நீ!
...மாந்திட மயங்கும் வண்டும்நீ!
புலரும் போதின் பகலவன்நீ!
...போதைப் பிரிக்கும் பதுமம்நீ!
அலறும் குழந்தை அதுவும்நீ!
...அணைக்கும் அன்னை அவளும்நீ!
சொலரும் சத்சித் சுகமும்நீ!
...சொலும்நான் மறைநீ ராமக்ருஷ்ணா!....16.

9 January 2010

காமிய பக்தி அன்றிஎதும்
...கருதா பக்தி செய்ததிலை
பூமியைப் பொன்னைப் புலனைந்தைப்
...பேணா திருக்கும் துறவில்லை
சேமித் திடுநற் கருமம்செய
...சிறியே .னுக்குச் சிந்தையிலை
சாமியென் றுனைச்சர ணடைவதலால்
...செயலொன் றில்லை ராமக்ருஷ்ணா!....13.

ஒருவன் இன்புற் றிருக்கத்துயர்
...ஒருவன் அடைந்து வருத்தமுற
ஒருவன் நீதான் காரணமென்
...றுரைப்பார் வசைபல மொழிந்திடுவார்
விருப்பால் வெருப்பால் வேற்றுமைசெய்
...வேந்தன் என உனை வருணிப்பார்
கருமம் மூன்றின் காரணத்தை
...கருதா தாரே ராமக்ருஷ்ணா!....14.

8 January 2010

(தொடர்ச்சி...)

எங்கே வில்லும் வேய்ங்குழலும்
...ஏற்றின் நடையும், இன்னிசையும்?
எங்கே தலைமேல் மணிமுடியும்
...எழில்செய் மயிலின் தோகையதும்?
எங்கே காதின் குண்டலங்கள்?
...இசைக்கும் மணியின் ஆரமெங்கே?
இங்கெ இவற்றை ஒளித்துவந்தாய்
...ஏனோ உரையாய் ராமக்ருஷ்ணா!....11.

நோயால் வாடும் எந்தனுக்கு
...நல்ல வைத்திய நாதன்நீ!
வாயால் உரைக்கும் உன்னாமம்
...வாய்த்த அம்மந் திரம்மருந்தாம்!
ஓயா துலகோர் தரும்மருந்தை
...உட்கொள் ளாது விடுத்தேனே
மாயா தேவீ சாரதையின்
...மணவா ளாஸ்ரீ ராமக்ருஷ்ணா!....12.

7 January 2010

என் சமயம்!

ஒருநாய் பசியால் உழலும்வரை
...உணவதற் களிப்பது என்சமயம்
உறுநோய் கொண்டே வாடுபவர்க்
...குதவிகள் புரிவது என்சமயம்
அறியா மையிருள் அகன்றிடவே
...அறிவொளி காட்டுதல் என்சமயம்
தரித்திர நாரா யணசேவை
...தான்புரிந் தின்புறல் என்சமயம்!

நீயது நீயது எனதினமும்
...நெஞ்சிற் குரைத்தல் என்சமயம்
தீயது தேகம் தனைச்சுடினும்
...திகையா திருப்பது என்சமயம்
சேயது வெனத்தாய் காளியிடம்
...சிந்தைம கிழ்தல் என்சமயம்
தீயது நல்லது எனவு ணரா
...திவ்விய நிலையுறல் என்சமயம்!

07-04-1969

6 January 2010

அருள் வாழ்வு !

ஆயிரம் தெய்வங்கள் உண்டு-- அந்த
...ஆயிரமாய்த் தோன்றும் ஒன்றதும் உண்டு
ஆயிரம் ஒன்றென்ப தெல்லாம்--அற்ற
...அந்தப்பெருநிலை என்பதும் உண்டு
வாயிலிதைச் சொல்லும் வேதம்--அதன்
...வாக்கதும் எச்சிலைப் போன்றதால் வீணே
வாயினால் போர்புரி யாமல்--அருள்
...வாழ்வினில் நின்றிடு வீருலகீரே!

(ராமகிருஷ்ணர்)

5 January 2010

வலிமை வேண்டும் !

வலிமை வேண்டும் வலிமை வேண்டும்
..வலிமை வேண்டும் வாழ்வெலாம்;
வலிமையுற்ற போது நீங்கும்
..வாழ்விலுற்ற தாழ்வெலாம்!

நிலத்தைக் காக்கும் வேந்தர்க்கும்
..வளத்தைக் காக்கும் உழவர்க்கும்
உளத்தைக் காக்கும் முனிவர்க்கும்
..குலத்தைக் காக்கும் மாதர்க்கும் (வலிமை)

தொண்டியற்று வோருக்கும்
..தொழிலி யற்று வோருக்கும்
பண்ணியற்று வோருக்கும்
..பகையகற்று வோருக்கும் (வலிமை)

வீணை தூக்கும் கையிலும்
..வில்லைத் தூக்கும் கையிலும்
பானைத் தூக்கும் கையிலும்
..பணியத் தூக்கும் கையிலும் (வலிமை)

துன்பம் நீக்க ஓடவும்
..தீமை களை சாடவும்
இன்பம் வேண்டி தேடவும்
..இறைவனையே நாடவும் (வலிமை)

சஞ்சலத்தை வெல்லவும்
..சாவினையே கொல்லவும்
துஞ்சுவதைத் தள்ளவும்
..தூய்மைக் காத்துக் கொள்ளவும் (வலிமை)

முத்தி இன்பம் தேக்கவும்
..மூட இன்பம் நீக்கவும்
சத்தியத்தைக் காக்கவும்
..சாந்திக் கொடியைத் தூக்கவும் (வலிமை)

4 January 2010

எழில் மாலை வேளை!

எத்தனை எத்தனை எழில்மாலை-- எங்கும்
...இன்பம் பொங்கவென்று வந்தவேளை--தத்தி
தத்திமலை வாயில்விழத் தங்கக் கதிரோனும் செல்லும்
...காட்சி என்ன மாட்சி!

மேலைத்திசை எங்கும் ரத்தச் சிகப்பு-- என்னை
...மேலும் மேலும் வந்துகவ்வும் திகைப்பு-- தென்னஞ்
சோலையும் பாளையும் மேயும் காளையும் பசுவும்-- அந்த
...வண்ணம் கொண்டு மின்னும்!

எத்தனை முறைகள் பார்த்திட் டாலும்-- இது
...என்றும் புதிதாகி யென்னை ஆளும்-- என்றன்
சித்தத்திற் குள்ளும் இக்காட்சி சென்றுபல வண்ணங்களைப்
...பூசும் காணக் கூசும்!

ஒவ்வொரு கணமும் வண்ணம் மாறும்--உடன்
...ஒவ்வொரு வித அழகு நேரும் --இந்த
செவ்வை மிகும் வானெழிலை சித்திரம் வரைய கையும்
...துடிக்கும் தோல்வி கிடைக்கும்!

சாவென் பதுவும் சஞ்சலமாம்
...சனனம் என்பது வும்துயராம்
யாவும் பிறப்பு இறப்பென்னும்
...இருமை வெல்லல் ஆகாது
நாவும் நெஞ்சும் நிறைவாக
...நாதன் உன்றன் நாமத்தை
கூவும் அடியா ரால்மட்டும்
...கூடும் வெல்லல் ராமக்ருஷ்ணா!....9.

பொருப்பின் மேலே உறைவோரும்
...புதர்க்கொள் வனத்தில் வசிப்போரும்
நெருப்பை நீரை ஒன்றெனவே
...நினைத்துத் தவங்கள் புரிந்தெதிலும்
விருப்பை வெறுப்பை அழித்தவரும்
...விழியால் உன்னைக் காணாருன்
சிறப்பைப் போற்றும் அடியாரே
...சிறக்கக் காண்பார் ராமக்ருஷ்ணா!....10.

3 January 2010

சத்தியப் பாதைச் செல்வோர்கள்
...ஜயமே அடைவார் தோல்வியுறார்
நித்திய வாழ்வைப் பெற அதுவே
...நேர்வழி என்வே வேதங்கள்
ஒத்தியம் பிடுதல் அறிந்தாலும்
...ஒன்றும் புரிய அறியேனே!
அத்தகை வாழ்க்கை வாழ்ந்திடவே
...அடியே நுக்கருள் ராமக்ருஷ்ணா!....7.

பிரமச் சரிய நன்னெறியை
...பத்தீ ராண்டும் மேற்கொண்டால்
பிரம ஞானம் அடைந்திடுதல்
...பிறகே எளிதாம் என உரைத்தாய்
பிரமன் படைத்த பெண்ணினத்தை
...பரதே வியெனப் போற்றவருள்
பிரமன் என்ற நிலைமாறி
...பிறந்திங் குற்ற ராமக்ருஷ்ணா!....8.

பி.கு. 7 --ஆம் பாடலில்,மூன்றாவது அடியின் ஐந்தாம் சீரில் 'புரிய' என்னும் சொல்லுக்கு,--'ட்டு டு ப்ராக்டிகலி' என்று ஆங்கிலத்தில் அமரர் சிவாமிருதம் குறிப்பு கொடுத்துள்ளார்.

2 January 2010


புளியின் சுவையும் காரத்தின்
...புன்மைச் சுவையும் தீஞ்சுவையும்
களித்தே இவ்வேழ் சுவையருந்திக்
...கடையேன் நாவை வளர்ப்பதலால்
வெளியும் உள்ளும் நிறைந்தவனே
...விமலா! உலகை உண்டாக்கி
அளிப்போய் அழிப்போய் எனநாவில்
...அரற்றிச் சுவைக்கேன் ராமக்ருஷ்ணா!....5.

அன்பால் உலகை ஆண்டவனே!
...ஆண்பால் பெண்பால் பலவின்பால்
துன்பால் எவையும் வாடிடவும்
...துடைக்க தாவும் கருணையினால்
என்பால் தசையால் உயிரதனால்
...எவர்க்கும் உடைமை ஆகினையே!
பொன்பால் பெண்பால் போயுழலும்
...புலையேன் எனையாள் ராமக்ருஷ்ணா!....6.

1 January 2010


வயிற்றில் சுமந்தாள் என்னன்னை
...வயதில் சுமந்தான் என்னப்பன்
பயிற்றும் ஆசான் நான்கல்வி
...பயிலும் போது எனைசுமந்தான்
தயிற்றில் வெண்ணெய் போன்றவனே
...தாயும் தந்தை குருவன்றி
உயிற்றின் முதல்வா எனைச்சுமக்கும்
...ஒருதெய் வமுநீ ராமக்ருஷ்ணா!....3

படிக்க இனிக்கும் உன்சரிதம்
...பார்க்க இனிக்கும் உன்னுருவம்
பிடிக்க இனிக்கும் உன்பாதம்
...பிதற்ற இனிக்கும் உன்னாமம்
நடிக்க இனிக்கும் உன்னிடத்தில்
...நயக்கும் பக்தன் போலவுமே
கடிக்க இனிக்கும் கரும்பெனவே
...கருத இனிக்கும் ராமக்ருஷ்ணா!....4