Visitors

31 May 2010

கதாதர அகவல்

உண்டின்பம் எனவேநான் ஓடிக் களைத்தேனுன்
தொண்டின்பம் காணவருள் துரையே கதாதரனே!

பொய்யாக உன்பக்தன் போல நடித்தேனே
மெய்த்தொண்டன் ஆகஎனை மாற்றாய் கதாதரனே!

யந்திரிநீ!உன்கையில் யந்திரம்நான் என இருக்க
தந்திரம்நீ ஒன்றுசொல்லாய் தயவாய் கதாதரனே!

என்ன துன்பம் உற்றாலும் அல்லதின்பம் உற்றாலும்
உன்னை மறவா திருக்குமுளம்தா கதாதரனே!

ஒருத்திக்கு ஒருகணவன் ஒன்பது பேருண்டோஎன்
கருத்தினிலே கற்பருளென் கணவா கதாதரனே!

29 May 2010

கதாதர அகவல்.

ஸ்ரிராம கிருஷ்ணாஎன் சிந்தைமிக நைந்தேன்
பாராமல் இருப்பதுவும் பண்போ கதாதரனே!

அன்னைசாரதா தேவி அன்புமண வாளாயிங்
கென்னை உன்னருள் செய்தேற்பாய் கதாதரனே!

பரமஹம்ஸ தேவவுனை பார்த்திடவே ஆசையடா!
வரமறுத்தால் என்செய்வேன் வாவா கதாதரனே!

சித்தி யெட்டும் பெற்றாலும் செல்வமெல்லாம் உற்றாலும்
பத்தியுன்மேல் இல்லாக்கால் பயனென் கதாதரனே!

இருமையிலா அத்துவிதம் எனக்கேதற்கு உன்றனெழில்
உருவாய்க் கண்டின்பமுற வேண்டும் கதாதரனே!

பெண்ணுருவைக் கண்டவுடன் பின்னோடும் என்மனமே
உன்னுருவின் பின்னோடும் இனிமேல் கதாதரனே!

சங்கரனோ சதுர்முகனோ சங்குசக்ர தாரியோயிங்
கெங்களை ஏமாற்றியநீ யாரோ கதாதரனே!

வண்டாடும் உன்றனிரு வண்ணமலர்த் தாளிணையைக்
கொண்டாடி மகிழ்வேனே கோனே கதாதரனே!

ஏழ்பிறப்பும் ஏழையருக் கேவல்செய வேண்டியுன்றன்
தாழ்சடையில் அவர் இல்லைத் துடைத்தாய் கதாதரனே!

உன்னாமம் அருந்தி உற்றபவ நோயகற்ற
எண்ணாமல் இருந்தழியும் எனையாள் கதாதரனே!

27 May 2010

கண்ணா!குழல் ஊது!


கோபியர்க் கருள குழலெடுத் துமிக
சோபிதம் கொளும் கீதம் ஊதினாய்!
மாபிழைப் புரியெமக்(கு) இன்றருள
நீபிடித்து குழல் ஊது கண்ணனே!...1

இன்பமேற் படும் இசையிலா யினும்
துன்பமாம் பிறவி தன்னைநீக் கிபே
ரின்பமேற் படும் இசைஉன தன்றோ?
அன்பனே! ஊது ஆயர்கண் ணனே!....2

கண்ணதே உயர் கரணமாம் என
எண்ணிடல் பிழை என்றுணர்கிறேன்
பண்ணிசைக் குழல் பருகும்செவி களே
முன்னதற் கும்மே லானதே கண்ணா!....3

பாலையில் கண்ட பருகும்நீரைப் போல்
வேலைசூழ் உலக வேதனை விடாய்
கோலகீத முன் குழலிசைத் திடும்
வேளைதீரு மே வேணுகோபா லனே!...4

பெண்ணினாசை யால் பேதலிப் பவர்
மண்ணினாசை யால் மதிமயங் குவோர்
பொன்னினாசை யால் புலம்பு வோ ரல்லால்
அண்ணலே!உன் பால் ஆசைக்கொள் கிலார்?....5

24 May 2010

அருள் தருவாய் பரமஹம்சா!

பஞ்சின் காயை பழமென நினைந்த அஞ்சுக மாவேனோ?
தஞ்சம் தருமுன் தாளினை அடையும் தகைமை யுறுவேனோ?

முன்னே புரிந்த மூவினைக் காளாய் மோசம் போவேனோ?
தென்னீச் வரத்து தேவா! உன்றன் திருவடி சேர்வேனோ?

காம காஞ்சனம் எனுமிரு கயிற்றால் கட்டுண் டிடுவேனோ?
ராம கிருஷ்ணா எனும்நாமம் கேட்டேன் ரோமஞ் சிலிர்ப்பேனோ?

மாரன் தம்பால் மனமே கலங்கி மதிகெட் டலைவேனோ?
வீர நரேந்திர நாதன் தொழுமுன் பாதம்பார்ப்பேனோ?

பொன்னால் பெண்ணால் மண்ணா லென்மனம் புண்ணா கிடுவேனோ?
அன்னை சாரதா பதியே! உனைக்கண் முன்னால் காண்பேனோ?

மரணம் ஜனனம் ஜனன மரணமெனும் மாயைப் போறுமையா!
சரணம் அடைந்தேன் சரணா கதியருள் சற்குரு பரமஹம்சா!

15 May 2010

பாவையர்க் குலத்தைப் போற்றும் பதம்!
...பணத்தை கணமும் நினையாத பதம்!
சேவைசெய் துயரச் சொன்ன பதம்!
...செம்மலாம் ராமகிருஷ்ண பதம்!....18

காம கோப யமகால பதம்!
...காசைப் பரிசிக்கக் கூசும் பதம்!
நாமச் சேவையில் தேமதுரப் பதம்!
...நாயகன் ராமகிருஷ்ண பதம்!....19

அவதரித்து ஆளான பதம்!
...அஞ்சலென் றபயம் அளிக்கும் பதம்!
தவம் புரிந்து தன்னை அளித்த பதம்!
...தத்துவன் ராமகிருஷ்ண பதம்!....20