நஞ்சே நிறைகனி யதனைப்போய்
...நற்கனி யெனநினை அஞ்சுகத்தை
பஞ்சே தரும்காய் பழுக்குமென
...பசித்தே காக்கும் பறவையைப்போல்
அஞ்சே புலன் தரு ஆனந்தம்
...அருந்திக் காக்கும் அசடன்யான்
நெஞ்சே கனிய நீதரும் இன்
...அருள்கனி பெறவோ ராமக்ருஷ்ணா!....49.
கற்றே கலைகள் அறிந்தென்ன?
...காசை மலைபோல் குவித்தென்ன?
நற்றேன் மொழியார் அணைப்பிருந்தும்
...நலம்பல நிறைந்தும் பயனென்ன?
சற்றே வாழ்ந்து சருகாகிச்
...சாயும் உடலின் தன்மையினை
உற்றே நோக்கி உளம்நடுங்கி
...உனைச்சர ணடைந்தேன் ராமக்ருஷ்ணா!....50.
10 years ago
No comments:
Post a Comment