Visitors

31 March 2010

ராமகிருஷ்ண பதம்!

ராமகிருஷ்ண பதம்!

படித்தவ ரெல்லாம் பணியும் பதம்!
...பாமர ரெல்லாம் போற்றும் பதம்!
இடித்துரைத் தவரும் ஏற்கும் பதம்!
...எந்தையாம் ராம கிருஷ்ண பதம்!...1.

அன்னை சாரதா அணியும் பதம்!
...அழகு மிளிரர விந்த பதம்!
பொன்னை பெண்ணைபொய் யாக்கும் பதம்!
...புனிதனாம் ராம கிருஷ்ண பதம்!....2.

சசிநிதம் பணிந்துளம் கசியும் பதம்!
...சத்சித் சுகமதை சேர்க்கும் பதம்!
பசித்த வர்க்கமுதென ருசிக்கும் பதம்!
...பரமனாம் ராம கிருஷ்ண பதம்!....3.

26 March 2010

தங்கிய உலகில் தனைமறந்தே
...தறிகெட் டலைந்தே துன்புற்றே
பொங்கிய உளத்தோ டுனைமிகவும்
...போற்றியுன் அருளினை வேண்டுகிறேன்
தொங்கிய தீங்கனி கள்நிறையும்
...தருசூழ் பேலூர்த் தலத்துறைவோய்!
சங்கையெ னும்பகை யைத்துளைக்கும்
...சரமே! சற்குரு ராமகிருஷ்ணா!....81.

காரணம் ஏதும் இன்றி
...கருணைசெய் வோனே போற்றி!
சாரதை யன்னை போற்றும்
...சற்குரு நாதா போற்றி!
பாரெலாம் வாழ வந்த
...பரமஹம் ஸனே போற்றி!
பேரருள் ராம கிருஷ்ண
...பொற்பதம் போற்றி! போற்றி!!....82.

எனக்குத் தெரிந்தச் சொற்கொண்டு
...ஏதோ செய்தேன் கவியென்று
உனக்குத் தொடுத்தப் பாமாலை
...எனவே அளித்தேன் இதில ழகும்
மணக்கும் தன்மை இலையெனினும்
...மனத்திற் கொள்ளா தேற்றிடுவாய்!
தனக்குத் துன்பம் கொடுப்போர்க்கும்
...தஞ்சம் கொடுக்கும் ராமகிருஷ்ணா!....83.

24 March 2010

காமார்ப் பதியின் கனியேவா!
...கன்னியர் மயங்கும் கண்ணாவா!
மாமா யங்கள் புரிந்தோய்வா!
...மாசொன் றில்லா மணியேவா!
தூமா மலரின் பாதாவா!
...தூய அன்னைத் துணைவாவா!
ஏமாற் றாமல் என்முன்னே
...இன்றே வாவா ராமகிருஷ்ணா!....79.

ஈங்கார் எனைப்போல் பாவியர்கள்
...இறைவா உன்றன் அருள்வேண்டி
ஏங்கார் எல்லாம் இழிகுலத்தோர்!
...என்றே கேட்டும் இசையாஎன்
தீங்கார் உள்ளம் திருந்திடவும்
...திரும்பும் பிறவி யொழிந்திடவும்
ஓங்கா ரத்தின் உட்பொருளே!
...ஒருசிறி தருள்வாய்! ராமகிருஷ்ணா!....80.

22 March 2010

விடையின் மேலமர் வித்தகனாம்!
...விடம்கொள் கண்ட சிவன்நீயோ?
தடையில் கருணைச் செய்பவனாம்
...திருவை மார்பில் கொள்மாலோ?
குடைந்தே அவனுந் தியில்பிறந்த
...குயவன் எனும்பிரம் மாதானோ?
விடையில் மருமம் ஆனவனே!
...விள்ளாய் நீயார்? ராமகிருஷ்ணா!....77.

நீசன் நின்னடி யான்போன்று
...நடிக்கும் கசடன் நின்னடிக்குத்
தாஸன் போன்றும் நடித்துன்மேல்
...துதிகள் பாடி ஆடிமிக
நேசன் போன்றும் நடிக்குமென்றன்
...நடிப்பை யெல்லாம் நிஜமாக்கு!
ஈசன் எனினும் ஏழையென
...இங்கே நடிக்கும் ராமகிருஷ்ணா!....78.

19 March 2010

நகமும் சிகையும் அகலுவதால்
...நானுறு துன்ப மொன்றுமிலை
முகமும் உடலும் சேர்தேகம்
...முடிந்தே அழியும் நாள்மட்டும்
அகமும் உயிரும் குலைகின்றார்
...அதிசயம் இதுவாம் சத்சித்து
சுகமும் ஆனாய் உனைப்பணிந்தேன்
...சோர்வொழிப் பாயே ராமகிருஷ்ணா!....75.

உள்ளத் துறைவோன் நீயானால்
...உணரும் படிவா ராததுஏன்?
உள்ளத் தோன்றா பிரமமென்றால்
...உடலைத் தாங்கி வந்ததுமேன்?
உள்ளப் பொருளே! அருளமுதே!
...உரைக்கும் கடந்த உன்னதனே!
உள்ளன் இலனெனும் பான்மைகொள்
...உலகின் முதல்வா! ராமகிருஷ்ணா!....76.

17 March 2010

நோவைக் காணா உடலைத்தா!
...நோன்பை நோற்கும் திறனைத்தா!
பாவை உன்மேல் பலநூறு
...படைக்கும் பாண்டித் தியமும்தா!
சாவை அஞ்சாத் தகைமைத்தா!
...சற்குரு நாதா மலர்ப்பாதா!
நீவைத் திடுதா வினில்மகிழும்
...நினைவைத் தாராய் ராமக்ருஷ்ணா!....73.

அன்புற் றோர்க்கே அருகோனே!
...அசடர்க் கெல்லாம் அரியோனே!
துன்புற் றோர்க்குத் துணைவோனே!
...துயில்வோர்க் கெல்லாம் துலைவோனே!
நண்புற் றோரை நயப்போனே!
...நாடா தாரை நசிப்போனே!
என்புற் றேலெனும் உடலெடுத்த
...எளியோ னேயென் ராமகிருஷ்ண!....74.

15 March 2010

நக்கும் எலும்பின் சுவையறியும்
...நாய்க்கும் நகையே தோன்றிடவே
மக்கும் மறையும் வாழ்வினிடை
...மறையாப் பொருளைத் தேடுகிறேன்
கொக்கும் பிடிபடும் தலைவெண்ணெய்
...குழைந்தால் என்றிடும் மூடன்யான்
மிக்கும் புகழுடை பேலூரின்
...மிசைவாழ் வோனே ராமகிருஷ்ணா!....71.

சேவைச் செய்யும் இதயம்தா!
...சேரும் அன்பும் அறிவும்தா!
பாவை யரைஎல் லாம்மாதா
...பரதே வியெனும் பான்மைத்தா!
நாவைக் கண்ணைச் செவிமெய்யை
...நாசியை வென்றிடும் தீரம்தா!
பூவைக் கொண்டுனை பூசிக்கும்
...பேரைத் தாராய் ராமகிருஷ்ணா!....72.

13 March 2010

பரமஹம்ஸ மூர்த்தி!

பல்லவி.
-------
ஆதி அந்தமிலா ஆனந்த மூர்த்தியே! ஸா
மாதிவேத மூர்த்தியே! ராமகிருஷ்ணமூர்த்தியே!(ஆதி)

அனுபல்லவி.
----------
நாதியற்ற வர்க்கருள் நற்கருணா மூர்த்தியே!
நரேந்திர உற்சவர்க்கு நல்லமூல மூர்த்தியே!(ஆதி)

சரணம்.
-------
கீர்த்தியுடைய உனை கெஞ்சி இறைஞ்ச இஷ்ட
பூர்த்தியடைவராம் புண்ணிய மூர்த்தியே!

பார்த்திங்கெனக்கும் அருள் பரமஹம்ஸமூர்த்தியே!
தீர்த்தங்களில் உயர்ந்த தக்ஷிணேஸ்வரம் வாழும்(ஆதி)

------------------------------------------

12 March 2010

குருமஹராஜா!

குருமஹராஜா!
---------------

பல்லவி.
------
குருமஹராஜா குருமஹராஜா
திருவருள் புரியும் கருணா சாகர (குரு)

அனுபல்லவி.
----------
மருவில் அன்னை சாரதை மனம்மகிழ் நாதா
மனித வடிவில் வந்த மறை த்தேடும் பாதா (குரு)

சரணம்.1.
-------
துன்பமும் இன்பமும் இங்கெனை வாட்டுதே
..இருவினைப் பயன்கள் இவ்விகத்தினில் கூட்டுதே
அன்பனே உன்நினைவு ஆனந்தம் ஊட்டுதே
..அற்பனுக் குன்னருள் உண்டெனக் காட்டுதே! (குரு)
சரணம்.2.
----------
சங்கு சக்கரமின்றி சாதாரணமாய் வந்தாய்
..சகல உயிர்க்கும் அன்பே செய்யமிக உவந்தாய்
மங்கும் தருமம் ஓங்க இங்குபிறந்த எந்தாய்!
..மைந்தன் நரேந்திரனை இம்மண்ணுலகிற்குத் தந்தாய்! (குரு)

*****************************

8 March 2010

அணிமா மணிமா எனக்கூறும்
...அட்ட சித்திகள் பெற்றாலும்;
பணிமா தர்களும் பொற்குவையும்
...பேரும் புகழும் பெற்றுமொளிர்
மணிமா லைப்பல புனைந்தாலும்
...மரணம் கொள்ளும் உடற்பிறப்பைத்
துணிமா சக்தி உந்நாமம்
...துதிப்போர்க் கேயாம் ராமக்ருஷ்ணா!....69.

கண்டம் புண்ணா கியதாலோ
...கழலும் வேத விழுப்பொருளைக்
கண்டம் டாமென முழங்கலென
...கருச்சனை செய்யோர் சிங்கமென
கண்டம் ஏழும் கேட்கவிவே
...கானந்தன் வாயாய் நீபகர்ந்தாய்?
கண்டம் மாமுனி யைக்கொணர
...குழந்தை யாகினை ராமகிருஷ்ணா!....70


கண்டம்=தொண்டை
கண்டம்=மணி
கண்டம்=தேசங்கள்
கண்டு+அம்

6 March 2010

பாடியும் ஆடியும் பதறியுடல்
...பாகாய் உருகுவைச் சிலபோதில்
கூடிடும் பிரம ஞானத்தில்
...கிடப்பாய் மூழ்கி சிலபோதில்
நாடிடும் பக்தர் நற்றவத்து
...ஞானியர் இவரிரு வரும்சேரா
கோடிய ரெனுமதைப் பொய்செய்தாய்
...குருமஹ ராஜா ராமகிருஷ்ணா!....67.

கோடியர்=extreme

வாளைத் தாவும் வயல்சூழும்
...வானோர் புகழ்கா மார்ப்பதியில்
நாளைத் தாவச் செய்கதிரோன்
...நேரும் படியவ தரித்தவனே!
வாளைத் தாவி எடுக்கையிலே
...வடிவோ டன்னையைக் கண்டவனே!
தாளைத் தாவிப் பற்றுமெனைத்
...தள்ளா தேஸ்ரீ ராமகிருஷ்ணா!....68.

4 March 2010

கடியா ரத்தைப் போல்தினமும்
...கணக்காய்ச் சுழலும் வாழ்நாளில்
படியா பாடம் பலகற்றேன்
...பதரைப் போன்றோர்; பரமெண்ணித்
துடியா மாக்கள் துணையன்றி
...தூயா உன்னைத் துதிபாடும்
அடியா ரிணக்கம் அதுஅருள்வாய்!
...அம்மே! அப்பா! ராமக்ருஷ்ணா!....65.

வசிக்கும் வீட்டை காத்திடும் ஓர்
...வாயுண விற்கும் நாய்; உட்கொள்
மசிக்கும் எழுதும் வரைகோலும்;
...மதியமும் இரவும் வயிறார
புசிக்கும் உணவிற் கீடாக
...புவிக்கென் செய்தேன் ஈடாக?
சசிக்கும் கங்கா விற்கும்தலை
...சடையில் இடந்தரும் ராமக்ருஷ்ணா!....66.

2 March 2010

சந்திர மணியின் பாலநமோ
...சாரதா பிரிய நாதநமோ
தந்திரப் ப்ராம்மணி அத்வைத
...தோதா புரியின் சீஷநமோ
அந்தரி காளியின் அன்பநமோ
...அனேக தர்மத்(து) துருவநமோ
மந்திர மருளும் லோககுரு
...மஹராஜ நமோ ராமக்ருஷ்ணா!....63.

குமரன் நர இந் திரநாதன்
...குழந்தை ராக்கால், பூரணனும்
அமரன் யோகீந் திரனவனும்
...அதிசூ ரநிரஞ் சனன்பாபு
தமரென் நுமிந்த அறுவருடன்
...தரணியின் மேலே வந்தவனே!
நமரென் னுனடி யாருடன்யான்
...நயக்கும் நாளெது? ராமக்ருஷ்ணா!....64.
...