Visitors

5 January 2010

வலிமை வேண்டும் !

வலிமை வேண்டும் வலிமை வேண்டும்
..வலிமை வேண்டும் வாழ்வெலாம்;
வலிமையுற்ற போது நீங்கும்
..வாழ்விலுற்ற தாழ்வெலாம்!

நிலத்தைக் காக்கும் வேந்தர்க்கும்
..வளத்தைக் காக்கும் உழவர்க்கும்
உளத்தைக் காக்கும் முனிவர்க்கும்
..குலத்தைக் காக்கும் மாதர்க்கும் (வலிமை)

தொண்டியற்று வோருக்கும்
..தொழிலி யற்று வோருக்கும்
பண்ணியற்று வோருக்கும்
..பகையகற்று வோருக்கும் (வலிமை)

வீணை தூக்கும் கையிலும்
..வில்லைத் தூக்கும் கையிலும்
பானைத் தூக்கும் கையிலும்
..பணியத் தூக்கும் கையிலும் (வலிமை)

துன்பம் நீக்க ஓடவும்
..தீமை களை சாடவும்
இன்பம் வேண்டி தேடவும்
..இறைவனையே நாடவும் (வலிமை)

சஞ்சலத்தை வெல்லவும்
..சாவினையே கொல்லவும்
துஞ்சுவதைத் தள்ளவும்
..தூய்மைக் காத்துக் கொள்ளவும் (வலிமை)

முத்தி இன்பம் தேக்கவும்
..மூட இன்பம் நீக்கவும்
சத்தியத்தைக் காக்கவும்
..சாந்திக் கொடியைத் தூக்கவும் (வலிமை)

No comments:

Post a Comment