Visitors

2 February 2010

மலரே மலரே நீ வாழி!
மலரே மலரே நீ வாழி!..1.

கள்ளமும் கபடமும் உனக்கில்லை;
...கருத்து பூசலும் உனக்கில்லை;
உள்ளத்தை திறந்தே காட்டிடுவாய்!
...உன்னத மலரே நீ வாழி!.. 2.

நினைவில் ஜாதி பேதமில்லை;
...நிறபேதம் உன் நெஞ்சிலில்லை;
அனத்தும் படைத்தவன் மேனியிலே
...அணியும் கதம்பத்தில் அகமகிழ்வாய்!..3.

மரணத்தின் பயந்தான் உனக்கில்லை;
...மலியும் நோய்நொடி எதுமில்லை;
ஒருநாள் இனிதாய் உயிர்த்ததன்பின்
...ஓய்ந்திடும் மலரே நீ வாழி!.. 4.

பேர் புகழாசை உனக்கில்லை;
...பெருமையும் சிறுமையும் உனக்கில்லை;
யார் புகழ்வாரென எண்னாமல்
...எழிலுடன் அசையும் நீ வாழி!.. 5.

வாய்ச் சொல் ஏதும் இல்லாமல்;
...வளைக்கும் கரங்களும் இல்லாமல்;
தாய் போல் என்னைத் தழுவிடுவாய்
தண்மலர் பெண்ணே! நீ வாழி!.. 6.

கதிரவன் வந்தால் களித்திடுவாய்;
...காதலன் சுடுகரம் பட மலர்வாய்;
உதிரவும் துணிவாய் அவன் மறைந்தால்1
உண்மைக் காதலி நீ வாழி!.. 7.

மேடையும் பந்தலும் இல்லாமல்;
...மாலையும் செண்டும் இல்லாமல்;
ஜாடையி லேயே சன்மார்க்கம்
...சாற்றிடும் மலரே நீ வாழி!.. 8.

(சிவாம்ருதம்.25.8.1969.)

No comments:

Post a Comment