Visitors

18 February 2010

நிலவு சுந்தரி நடந்தாள்...

நிலவு சுந்தரி நடந்தாள்...

ஜோதி நிலவு சுந்தரி--வான்
வீதியில் நடந்தாள்-- என்னிடம்
பாதி உயிரைப் பறித்துக் கொண்டு
பாவை நடந்தாள்.

மேகக் காட்டில் மறைந்து மறைந்து
மெல்ல நடந்தாள்-- உளம்
வேகும் என்னை தனியில் விட்டு
விண்ணில் நடந்தாள்.

இருண்ட வானில் துணையின்றி--மார்பு
இரைக்க நடந்தாள்--பயந்து
வெருண்ட மானைப் போல திகைத்து
வெண்மதி நடந்தாள்.

ஜொலிக்கும் விண்மீன் தோட்டத்தின் வழி
சோகமாய் நடந்தாள்-- காதல்
களிப்பைத் துறந்து ககனவெளியில்
கலைமதி நடந்தாள்.

தந்தை சூர்யன் தகிப்பை அஞ்சி
தண்மதி நடந்தாள்-பிறர்
நிந்தைக் காக பயந்து--என்னை
நீங்கி நடந்தாள்.

திரும்பி திரும்பிப் பார்த்து-- சந்திர
தேவி நடந்தாள்--தேன்
சுரும்பு மொய்க்கும் மலர்முகம்--கதை
சொல்ல நடந்தாள்.

ஏழைக் கவிஞன் அவளை நிறுத்தி
எப்படி பிடிப்பேன் -- இந்த
பீழை உலகை விட்டு வானில்
எப்படி பறப்பேன்.

No comments:

Post a Comment