ஸ்ரிராம கிருஷ்ணாஎன் சிந்தைமிக நைந்தேன்
பாராமல் இருப்பதுவும் பண்போ கதாதரனே!
அன்னைசாரதா தேவி அன்புமண வாளாயிங்
கென்னை உன்னருள் செய்தேற்பாய் கதாதரனே!
பரமஹம்ஸ தேவவுனை பார்த்திடவே ஆசையடா!
வரமறுத்தால் என்செய்வேன் வாவா கதாதரனே!
சித்தி யெட்டும் பெற்றாலும் செல்வமெல்லாம் உற்றாலும்
பத்தியுன்மேல் இல்லாக்கால் பயனென் கதாதரனே!
இருமையிலா அத்துவிதம் எனக்கேதற்கு உன்றனெழில்
உருவாய்க் கண்டின்பமுற வேண்டும் கதாதரனே!
பெண்ணுருவைக் கண்டவுடன் பின்னோடும் என்மனமே
உன்னுருவின் பின்னோடும் இனிமேல் கதாதரனே!
சங்கரனோ சதுர்முகனோ சங்குசக்ர தாரியோயிங்
கெங்களை ஏமாற்றியநீ யாரோ கதாதரனே!
வண்டாடும் உன்றனிரு வண்ணமலர்த் தாளிணையைக்
கொண்டாடி மகிழ்வேனே கோனே கதாதரனே!
ஏழ்பிறப்பும் ஏழையருக் கேவல்செய வேண்டியுன்றன்
தாழ்சடையில் அவர் இல்லைத் துடைத்தாய் கதாதரனே!
உன்னாமம் அருந்தி உற்றபவ நோயகற்ற
எண்ணாமல் இருந்தழியும் எனையாள் கதாதரனே!
11 years ago

No comments:
Post a Comment