Visitors

24 May 2010

அருள் தருவாய் பரமஹம்சா!

பஞ்சின் காயை பழமென நினைந்த அஞ்சுக மாவேனோ?
தஞ்சம் தருமுன் தாளினை அடையும் தகைமை யுறுவேனோ?

முன்னே புரிந்த மூவினைக் காளாய் மோசம் போவேனோ?
தென்னீச் வரத்து தேவா! உன்றன் திருவடி சேர்வேனோ?

காம காஞ்சனம் எனுமிரு கயிற்றால் கட்டுண் டிடுவேனோ?
ராம கிருஷ்ணா எனும்நாமம் கேட்டேன் ரோமஞ் சிலிர்ப்பேனோ?

மாரன் தம்பால் மனமே கலங்கி மதிகெட் டலைவேனோ?
வீர நரேந்திர நாதன் தொழுமுன் பாதம்பார்ப்பேனோ?

பொன்னால் பெண்ணால் மண்ணா லென்மனம் புண்ணா கிடுவேனோ?
அன்னை சாரதா பதியே! உனைக்கண் முன்னால் காண்பேனோ?

மரணம் ஜனனம் ஜனன மரணமெனும் மாயைப் போறுமையா!
சரணம் அடைந்தேன் சரணா கதியருள் சற்குரு பரமஹம்சா!

No comments:

Post a Comment