Visitors

3 July 2010

கனவு மயம் !

காரிருள் காணும் கனவே--இன்பக்
...காலை நேரம்;--என்றன்
ஆருயிர் காணும் கனவே--இந்த
...அழகிய தேகம்.

வாரிதி காணும் கனவே--பொங்கி
...வழியும் அலைகள்;--இந்தப்
பாரிடம் காணும் கனவே--விண்ணைப்
...பறிக்கும் மலைகள்.

வானகம் காணும் கனவே--பஞ்சாய்
...வளரும் மேகம்;--அடர்
கானகம் காணும் கனவே--குயில்கள்
...வளர்க்கும் ராகம்.

செங்கதிர் காணும் கனவே--மேலைத்
...திசையின் ஜாலம்;--வெண்
திங்களின் கனவே மின்மினிக்--கூட்டம்
...திகழும் நீலம்.

வண்ண மலர்காண் கனவே--பறக்கும்
...வண்ணத்துப் பூச்சி;--ஒரு
சின்னக் குழந்தையின் கனவே--ஆடும்
...சிறுமரப் பாச்சி.

ஆடிச் செல்லும் நதியின் கனவே--தேங்கும்
...அணையின் தேக்கம்;--முடிவை
நாடிச் செல்லும் நம்மின் கனவே--இடையே
...நடுநடுத் தூக்கம்.

வானும் மண்ணும் பிறவும்--இறைவன்
...வளர்க்கும் கனவு;--நாம்
பேணும் இச்சிறு வாழ்வே--இறைவன்
...பிதற்றும் கனவு.

No comments:

Post a Comment