Visitors

3 June 2010

கதாதர அகவல்!

பொய்யாம் ஜகமாயைப் போயொழிய உன்னருளை
செய்யாயோ செய்குவையோ செப்பாய் கதாதரனே!

சாருயிர்க்கு பொருளுக்கு சரீரத்திற் கேங்காமல்
ஆருயிர்க்கும் நானேங்க அருளாய் கதாதரனே!

வீர விவேகா நந்தன் விரும்பும் பொற்பாதத்தை
சேர அணைத்திடு மந்த சுகம்தா கதாதரனே!

விட்டென்றன் உயிர்ப்பிரிந்து வீணாகப் போகுமுன்னுன்
பட்டான மேனியென் கண்படுமோ கதாதரனே!

ஒன்றொன் றொன்றொன்றொன்றென உள்ளபுல .னைந்தாலே
கொன்றென்னை வாட்டுவதுன் குறிப்போ கதாதரனே!

தேனுன்னும் வண்டாக தேவாஉன் பாதமலர்த்
தானெண்ணிச் சிந்தை களித்திடுமோ கதாதரனே!

முட்டாள் என்பிழைஎண்ணி முனிந்தேநீ என்கையை
விட்டால்நான் என்னசெய்வேன் வேண்டாம் கதாதரனே!

அத்துவித ஞானரசம் அன்னைஅருள் பானரசம்
நித்தம் அருந்திய உனக்கு நேர்யார் கதாதரனே!

தஞ்சம் அடைந்தவரை தடுத்தா ளுவாயென்று
நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன் நேசா கதாதரனே!

(கதாதர அகவல் நிறைவுற்றது!)

No comments:

Post a Comment