தங்கிய உலகில் தனைமறந்தே
...தறிகெட் டலைந்தே துன்புற்றே
பொங்கிய உளத்தோ டுனைமிகவும்
...போற்றியுன் அருளினை வேண்டுகிறேன்
தொங்கிய தீங்கனி கள்நிறையும்
...தருசூழ் பேலூர்த் தலத்துறைவோய்!
சங்கையெ னும்பகை யைத்துளைக்கும்
...சரமே! சற்குரு ராமகிருஷ்ணா!....81.
காரணம் ஏதும் இன்றி
...கருணைசெய் வோனே போற்றி!
சாரதை யன்னை போற்றும்
...சற்குரு நாதா போற்றி!
பாரெலாம் வாழ வந்த
...பரமஹம் ஸனே போற்றி!
பேரருள் ராம கிருஷ்ண
...பொற்பதம் போற்றி! போற்றி!!....82.
எனக்குத் தெரிந்தச் சொற்கொண்டு
...ஏதோ செய்தேன் கவியென்று
உனக்குத் தொடுத்தப் பாமாலை
...எனவே அளித்தேன் இதில ழகும்
மணக்கும் தன்மை இலையெனினும்
...மனத்திற் கொள்ளா தேற்றிடுவாய்!
தனக்குத் துன்பம் கொடுப்போர்க்கும்
...தஞ்சம் கொடுக்கும் ராமகிருஷ்ணா!....83.
11 years ago

No comments:
Post a Comment